Saturday, May 3, 2014

பள்ளிக்கால கதைகள்

வானிலை அறிக்கை

ஒரு வார காலமாக பெய்து கொண்டிருக்கும் மழை இன்று வராது, வானம் வறண்ட
நிலைகொண்டிருக்கும்.

கிழக்கு பக்கம் உள்ள பள்ளிக்கூடங்களில் 10 மணி முதல் சில நிலவுகள் காட்சி தரலாம்

மணி 7 தாண்டியாச்சு 11ஆவது படிக்கிற புள்ள இன்னும் தூங்கறது பாரு”

“எந்திரி! எந்திரி!”

“ஆஹா! வழமை போலவே நேரம் ஆகிவிட்டதே!”

வேகமா எழுந்து குளியலறைக்குள்  தாழிட்டு கொள்ளாமல் பல் துலப்பானில்
கோல்கேட்டை நிரப்பி, துவாலையும் கைலியும் எடுத்து கொண்டு

காவேரியை நோக்கி ...


வாரம் முழுதும் விடாமல் பெய்து கொண்டிருந்த மழையால் பள்ளிகளுக்கு விடு
முறை விட்டனர் அதுவும் 9:30 மணியளவில் பள்ளிக்கு வந்து முதல் வகுப்பு
நிறைவடைந்த பின் விடுப்பு.

விடுமுறை பள்ளிக்குதான் விட்டார்கள்
மழையுமல்லவா விடுப்பு எடுத்து கொண்டது.
வலிமையான கரங்களை நிறுத்தி கொண்டு, மெல்ல தூறலானது

“டேய்! கிருபா புதுப்படம் வந்திருக்குடா - போலாமா!”

“ஹைய்யா! போலாம் போலாம்”

“ஜே! எங்கேடா”

“கணினி லேபில் சார் கூட பேசிகிட்டு இருக்காண்டா”

வகுப்பறையை தவிர மற்ற இடங்களில் நண்பர்களாக பழகும் சீனி மற்றும் R.V.K
சாருடன் பேசி கொண்டிருந்தேன்


“என்ன சார்! ஸ்கூலு விட்டவொன்னே மழையும் விட்டுடுச்சி, போர் அடிக்குமே!”

“R.V.K படத்துக்கு போகலாமா”

“போகலாம் சீனி - ஜே! நீயும் வர்றியா”

“R.V.K அவங்க போகட்டும், நாம் டீச்சர்ஸா போவோம்”

அதுக்குள்ளே கிருபாசங்கர் என்ற கிருபா அங்கே வந்தான்

“சார்! மே ஐ கம் இன்”

“வா! வா! என்ன கிருபா படத்துக்கா”

“ஆமாம் சார்”

“என்ன படம்”

“வைகாசி பொறந்தாச்சி”

“அதுதான் வருசா வருசம் பொறக்குதேடா - சரி சரி நீங்க கிளம்புங்க, R.V.K
நாம வேற படத்துக்கு போவோம்”

ஆங்காங்கே குழுக்களாக பேசி கொண்டிருந்தனர் மாணவர்கள்.

பெரும் பாலான மாணவிகள் சைக்கிளை எடுத்து கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டனர்.

“செந்தில் - எவ்வளவு பணம் இருக்கு, யார் யார் வாறாங்க”

“15 பேராவது வருவாங்கடா, பணம் அவ்வள ...”

“சரி நீங்க எல்லோரும் தியேட்டர் போயிடுங்க நான் சிராஜ் அண்ணன் கிட்ட பணம்
வாங்கிட்டு வந்துடறேன் - பியர்லஸ் தானே”

“ஆமா மாப்ள”

“சாதிக் வர்றான்ல”

“வர்றேன் மாப்ள- டிக்கெட் எடுக்கனும் - அதானே”

மழை தூறலை இரசித்தபடியே வேகமாக பஸ் ஸடாண்ட் நோக்கி நடந்தேன். P.U.P
டைலர்ஸில் தான் அண்ணன் இருக்கும் இச்சமயத்தில்.
சற்று தூரம் கடந்தவுடன் அட! அதோ அண்ணன் இப்பதான் போறாங்க போல

“சிராஜ்! சிராஜ்!”

“என்ன ஜே! இந்த நேரத்தில் பள்ளிக்கூடம் விட்டுட்டாங்களா”

“ஆமாண்ணே! பசங்க எல்லாம் படத்துக்கு போ ...”

“ம்ம்ம் ... எவ்வளவு வேணு... சரி இந்தா 100 ரூவா! போதுமா”

“ஹி ஹி, போதும் அண்ணே நேரம் ஆகுது நான் வர்றேன்”

“சாப்பிட வருவியா”

“எடுத்துட்டு வந்த சாப்பாடு இருக்கு, படம் முடிந்தவுடன் குத்தாலம் போய்டுவேன்”

“ம்ம்ம் ... சரி”

பசங்க இன்னும் கிளம்பி இருக்க மாட்டாங்க என நினைத்து கொண்டு பள்ளி நோக்கி
வேக நடை போட்டேன்.

S.T.Pauls பள்ளியை கடந்த பின் தினமும் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போது யாரோ
தன்னை கவனிப்பது போல் தோன்றும் அது போலவே அப்பவும் தோன்றியது.

மெல்ல திரும்பி பார்த்தேன்

சென்ற வாரம் தொலைக்காட்சியில் பார்த்த மிருதங்க சக்கரவர்த்தி மனதிலே
ஆவர்த்தனம் செய்தார்

இது என்ன இன்று

மேகம் கறுத்து இருப்பதால்
பகலில் நிலவு முகம் காட்டுகிறதோ

வானம் மழை நீரை மட்டுமல்லாது
ஒரு
தேவதையையும் தரைக்கு இறக்கிவிட்டிருந்தது

தேவதையின் கையில் ரோஜா
அட இதென்ன கருப்பு ரோஜா
அதுவும் இத்தனை பெரிதாக

ஓஹ்! குடையா.

கார்மேகமென நினைத்து
கூந்தலுக்குள் ஒளிந்து கொள்ள
இடம் தேடின தூறல்கள்

என் பார்வையில்
உருகி கொண்டிருந்த தேவதையை
மேலும் நினைய விடாமல்
போர் செய்து கொண்டிருந்தது அந்த குடை

“மழையா இருக்கே குடை தாறியளா”

“இந்தாங்க தாராளமா எடுத்துக்கோங்கோ”

இவை எங்களின் மனக்குரல்கள்

பேசிக்கொள்ளும் தூரத்தில் நாங்கள் இல்லை

சாலைகளின் எதிர் திசையினில் இருந்தோம்.

வில்லன்களாக பேருந்துகள் குறுக்கே சென்ற வண்ணம் இருந்தன, உபரியாக
சத்தமிட்டு ஹாரனித்தன

நான் கைநீட்டி கேட்பதுபோல் சைகை செய்ய

தேவதை எடுத்துகொள் என்று கருப்பு ரோ ... ச்சே ச்சே குடையை நீட்டியது

சந்தோஷப்பூக்கள் மனமெங்கும் பரவ
புன்னகையாக உதடு வழி வெளி வந்தது.

தலையை சிலிப்பிகொண்டு பள்ளியை நோக்கி வேக நடை போட்டேன் ...

கண்மணியே காதல் என்பது
கற்பனையோ காவியமோ
கண் நிறைந்த ஓவியமோ!
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் ...

பாடல் காற்று வழி தவழ்ந்து வந்தது ...

Friday, May 2, 2014

பள்ளிக்கால கதைகள்

“மாப்ள! பூம்புகார் போவோமா”
“போலாம் பார்த்தி, எதுல …”
“சைக்கிள்ல தான் …”
“சரி! சாப்டுட்டு 2 மணிக்கு எல்லோரும் வந்துடுங்க”
“ஆங்! குளிக்க டிரஸ் எடுத்துட்டு வந்துடுங்கப்பா”
ஆர்வத்தோடு வீடு நோக்கி ஓடினேன், சித்தப்பா வீட்டு வாசலில் கல் தடுக்கி விழுந்தேன். நிதானம் கொள்ள சற்று நேரம் பிடித்தது. மெல்ல எழுந்து வீடு நோக்கி நடை போட்டேன் …
வீட்டினில் நுழைகையில் தங்கையின் முகத்தில் சிரிப்பு இல்லை யோசனையோடு அடுக்களை சென்றேன். அங்கே தாயின் முகத்திலும் வாட்டம் ..
15 பைசா கார்டு எடுத்து குடுத்தாங்க
மின்னலற்ற இடி ஒன்று இறங்கியது
பள்ளியிலிருந்து வந்திருந்தது
9ஆம் வகுப்பில் “FAILED”
அலமாறியை ஒட்டி மூலையில் சுவரோடு சாய்ந்து ஒடுங்கி விட்டேன். ஒரு இறுக்கமான சூழல் வீட்டின் உள்ளேயும் எனக்குள்ளேயும். அப்படியே சாய்ந்து படுத்து கொண்டேன். எம்பூட்டு நேரம் தூங்கினேனோ தெர்லை
“சாப்பிட வா!”
--------
“படிக்கிறப்பவெல்லாம் – ஒழுங்கா படிக்காம … ”
“சரி விடுங்க, சாப்பிட வா”
----------
வெட்கம் தாளவில்லை, தந்தையின் முகம் பார்க்கும் தகிரியமோ இல்லவே இல்லை. இப்படியான உணர்வுகளுக்கு இடையேயும் பூம்புகார் போலியேன்னு வருத்தம் …
கலவையான உணர்வுகளோடு விடுமுறை நாட்கள் முடிஞ்சிச்சி, பள்ளிக்கூடம் திறந்தாயிற்று. கன‌த்த இதயத்தோடு மீண்டும் 9ஆம் வகுப்பில் போய் அமர்ந்தேன். என்னையும் பெஞ்சையும் தவிர அனைவரும் மாறி இருந்தனர், கரும் பலகைக்கு கூட புது பெயிண்ட் அடித்து இருந்தார்கள். பார்வைகளில் தெரிவது கேளியா பச்சாதாபமா இன்னும் எத்தினியோ விதமான முகங்கள் ஒற்றை புன்னகையில் அவர்களை தள்ளி வைத்து பெருங்குரலெடுத்து அழுகின்றது மனம்.
முதல் வகுப்பு தமிழ், தமிழ் டீச்சர் வகுப்புக்குள் வந்து எங்களுடைய ‘குட் மார்னிங்’ வாங்கி கொண்டு அவங்களும் குட் மார்னிங்கிவிட்டு, பின் வரிசைகளில் இருக்கும் யாரையோ கை காட்டி தமிழ்நூலில் இருந்து ஒரு பாடத்தை படிக்க சொன்னார்.
டீச்சர் சொல்லி 2 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது எந்த சத்தமும் கேட்கவில்லை. கூச்சத்தினால் பெண்களின் பகுதியை திரும்பி பார்க்காத நான், ஏதோ ஒரு உந்து சக்தியில் திரும்பி பார்த்தேன். காவி உடையில் இரட்டை ஜடை தேவதை உடைத்த மடையென கண்களில் அருவி … ஒன்றும் விளங்காமல் நாங்களும் டீச்சரும். த்சோ த்சோ என்று நான் உச்சு கொட்டியதில் சக மாணவர்கள் என்னை பார்த்து புன்னகைத்தனர். நான் இரண்டாம் முறையாக அந்த வகுப்பில் அமர்ந்துள்ளேன் என்பதை மறக்க துவங்கினேன்.
எற்கனவே அறிமுகமான சக-மாணவர்கள் தாம் சிறிது நாட்களில் சகஜ நிலைக்கு சென்று விட்டேன்.
பள்ளியில் எலக்‌ஷன் வந்தது, நாமினேஷன் செய்யும் நாள் நான் விடுப்பு எடுத்திருந்தேன். அடுத்த நாள் சென்றவுடன் தான் அறிந்தேன் எனது பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தது அதுவும் S.P.L போஸ்ட்டுக்கு. நண்பன் ரமேஷின் அன்புதான் அது.
என்னை பிடிக்காத(ஸ்கவுட் & பயாலஜி) வாத்தியாரின் மறைமுக மற்றும் நேரடி கிண்டல், இவைகளூடே தேர்தல் நாளும் நெருங்கிவிட்டது. எனக்கு எதிராக இரண்டு மாணவிகள் போட்டியில் இருந்தனர். கேன்வாசிங்குக்கு கூட போகலை நான், ஒரு வித சங்கோஜியம் தான்.
மதிய உணவு வேளை முடிந்து பள்ளிக்கு திரும்பினேன், இன்று 2:30 மணியோடு கேன்வாசிங் முடிந்தது 4:00 மணிக்கு வாக்கெடுப்புகள் நடைபெறும். ஒரு சில புது மாணாக்கர்களிடம் ஓட்டு கேட்டென், அவர்களோ எனக்கு போட இயலாதென்றும் இவருக்கு தான் என்று அவர்கள் கையில் எழுதியிருந்த எனது பெயரை காட்டினர். ட்ரேட் மார்க் சிரிப்போடு நான் என் ஸீட்டிற்கு சென்றேன் விட்டேன்.
ராதாவும், புதிய மாணவனான சூரஜ்(துணை எஸ்.பி.எல் போட்டியிடுபவன்)ம் தான் எனக்காகவும் கேன்வாசிங் செய்துள்ளார்கள் என்பது பிறகு தான் தெரிய வந்தது.
ஒட்டெடுப்பு முடிந்துவிட்டது, முடிவுகள் அறிவிப்பதற்காக மாணவர்கள் அனைவரையும் விளையாட்டு மைதானத்தில் நிறுத்தியிருந்தார்கள். பரிட்சை முடிவுக்காககூட இங்ஙனம் காத்திருந்ததில்லை அது தான் எழுதும் போதே தெரிந்து விடுமே
மைதானம் நோக்கி ஓடிக்கொண்டிருந்த என்னை ராஜ் ஸார் கூப்பிட்டார்.
“மிட்டாய் வாங்கி வைத்து விட்டாயா”
நான் நெளிந்தேன்
“முடிவு அறிவிக்கட்டுமே ஸார்”
“நீ தான் ஜெயிப்பே! வாங்கி வா” என்றார்
பக்கத்து கடைக்கு சென்று வாங்கி வைத்துக்கொண்டு மைதானத்திற்கு ஓடினேன்.
நான்கு விதமான குரூப்புகள் இருந்தன எங்கள் பள்ளியில்
ரோஸ். லோட்டஸ், ஜாஸ்மின், சன்ஃப்ளவர்
தேர்தல் இக்குரூப்புகளின் தலைவர்களுக்கும், உபவுக்கும் நடந்து இருந்தன. வாக்கெடுப்பின் ரிஸல்ட் சொல்லி(க்) கொண்டிருந்தார் பிரிண்ஸிபால். அஸிஸ்டெண்ட் எஸ்.பி.எல் கூட சொல்லியாகிவிட்டது.சூரஜ் ஜெயித்திருந்தான்.
இதோ அடுத்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த எஸ்.பி.எல் முடுவு மட்டும் தான் பாக்கி. மற்ற முடிவுகளுக்கான கைத்தட்டல்கள் ஓய்ந்து இருந்தன.
15 நிமிடங்களாக ரிஸல்ட்டுகளை அறிவித்து கொண்டிருந்த பிரிண்ஸிபால், சற்றே தலை நிமிர்ந்தார் கண்ணாடியின் இடைவெளியில் எங்களை நோக்கினார். நான் ஏதோ ஒரு வரிசையின் பின்னால் பதட்டத்துடன் …