Monday, October 17, 2011

பதிவுலக தோழமைகளே

அன்பு பதிவுலக தோழமைகளே இந்த கோரிக்கையை உங்களிடமும் வைக்கிறேன்.

சாதி, சமயங்கள், கட்சிகள், நிறங்கள் தாண்டி மொழி கொண்டு நாம் ஒன்றாக நடைப்போட்டு கொண்டிருக்கிறோம். சின்ன சின்னதாக புரிதல்களில் அங்கங்கே அவ்வப்போது தென்பட்டாலும் நாம் கொண்ட இணைய நட்புக்கு பங்கம் வந்ததில்லை. பதிவின் மூலமாக அறிமுகமாகி சகோதரன், சகோதரி, மாமன், மச்சான் என்ற உறவே இங்கே பலமாக இருக்கின்றது, பதிவுலகை விட்டு வெளியாக பல காலங்கள் ஆனாலும் இன்னும் தொடர்பில் இருக்கும் பதிவுலக நண்பர்கள் உண்டு, இது வரை முகம் காணாத சொந்தங்கள் இங்கு நிறைய உண்டு. எனக்கு அதிகம் எழுத தெரிந்ததில்லை ஆனால் பலரோடு நட்பு கொண்டிருக்கிறேன் இந்த இணைய உலகத்தில்.

கிட்டதட்ட ஒரு வருடத்திற்கும் மேல் தமிழ்மணத்தில் இணைந்ததில்லை, இன்று வரை தமிழ்மணம் முகப்பை பார்த்து பதிவுகளுக்கு செல்வதில்லை, எப்பொழுதுமே கூகில் ரீடரில் படித்து தான் பதிவுகளுக்கு செல்வதுண்டு, இந்த ஓட்டு, ஓட்டு பட்டை இதன் மீதான துவக்க மோகம் எப்பொழுதோ சென்று விட்டது. எல்லா திரட்டிகளுமே வியாபார நோக்கம் கொண்டதாகத்தான் நான் நினைக்கின்றேன், ஆனால் எல்லா ப்லாக்குகளும் அங்கனம் கிடையாது. ஓட்டு பட்டை இணைப்பிதில் நிச்சியம் திரட்டிகளுக்கே இலாபம் அதிகம், பதிவர்களுக்கு பிரபலம் மட்டுமே கிடைக்கின்றது, ஓட்டு பட்டை இல்லாமலும் அதை அடைய முடியும்.

தமிழ்மணம் இப்பொழுது பல கட்டுப்பாடுகளை விதிக்க துவங்கியுள்ளது, அது அவர்கள் இஷ்டம் - அவர்களின் கட்டுப்பாடுகளோடு தொடர்வதும் தொடராமல் இருப்பதும் நமது இஷ்டம்.

ஆனால், தனிமனித தாக்குதலோ ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையாளர்களை தாக்கும் விதமாக பேசுவதோ ஒரு பொது தளத்திற்கு அழகல்ல.

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக கொண்டுள்ளவர்களின் மனம் புண்படும்படியாக தமிழ்மண நிர்வாகி நடந்துள்ளார். “சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்” என்பது யாரையும் புண்படுத்தாத முகமன் இதனை கேலிக்குள்ளாக்கியுள்ளார், மேலும் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது


-------------------------



சில நாட்களுக்கு முன்பு terrorkummi என்னும் தளத்தில் தமிழ்மண நிர்வாகி இரமணிதரன் என்பவர் கூறிய கருத்து (அந்த கமெண்ட்டுக்களை காண இங்கே சுட்டவும்) மிகுந்த அதிர்ச்சியையும், முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டுவதாகவும் இருந்தது.


"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"


ஒரு திரட்டியின் நிர்வாகி பொறுப்பில் இருப்பவர் இப்படியான தரம் தாழ்ந்த கருத்தை கூறுவது மிகுந்த வேதனையளிக்கும் விசயம்.


இரமணிதரனின் இந்த செயல், இஸ்லாமிய போதனையை கேள்வி செய்வதாகவும், கொச்சைபடுத்துவதாகும் இருந்ததால், இதுக் குறித்து விளக்கம் அளிக்குமாறு தனி மெயில் ஒன்றை தமிழ்மண நிர்வாகத்திற்கு அனுப்பினோம். அந்த மெயில் சென்றடைந்ததும் இரமணிதரன் அவர்களைத் தான்.


அந்த மெயிலிற்கு பதிலளித்த ரமணிதரன், தனி நபரின் கருத்தை தமிழ்மணத்தின் கருத்தாக கருதி தமிழ்மணத்திற்கு மெயில் அனுப்ப வேண்டுமா என்றும், எனினும் இதனை தமிழ்மணத்தின் மற்ற நிர்வாகிகளின் கவனத்திற்கு அனுப்புவதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல், அந்த கருத்தை நீங்கள் உங்களை கேலி செய்வதாக ஏன் நினைக்கின்றீர்கள் என்றும் கூறியிருந்தார் (பின்பு பதிவுத்தோஷம் என்று எதனை குறிப்பிடுகின்றார் என்று தெரியவில்லை).


இதுநாள் வரை தமிழ்மண நிர்வாகிகளின் பதில் வரவில்லை. ஆகையால் இந்த விசயத்தை பொதுவில் வைக்கின்றேன்.


தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள். இஸ்லாமிய முகமனை கேலி செய்ததற்காக  தமிழ்மணம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதனை அந்த தளத்திலேயே இரமணிதரன் கேட்டாலும் பரவாயில்லை.

------------------------

இது நான் தோழமையாக பாவிக்கும் எல்லோரிடமும் கேட்டு கொள்கிறேன், இது முஸ்லீம்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சனையாக கருதாமல், உங்களுடைய எதிர்ப்புகளையும் பதிவு செய்யுங்கள்.

நன்றி.